கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இன்றும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கோவையில் காலை முதல் வெயிலின் தாக்கத்தினால் வெப்ப சலனம் இருந்து வந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென மழை பெய்ய பெய்தது.

கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக பிற்பகலில் சிறிது நேரம் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம், டவுன்ஹால், ஒப்பனக்கார வீதி, சாய்பாபா காலனி, சிவானந்தா காலனி ஜன நகரின் பல்வேறு பகுதிகளில் சிறிது நேரம் கன மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.