தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த ஏனாதியில் உள்ள கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 350க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஒற்றை சிலம்பம் மற்றும் இரட்டை சிலம்பம் பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 5 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 14, 17, 19 வயதிற்குட்பட்ட ஜூனியர், சப் – ஜூனியர், சீனியர் என பல்வேறு பிரிவுகளின்கீழ் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் தற்காப்பு கலையான ஒற்றைக்கை மற்றும் இரட்டைக் கைகளில் சுருள்வாலை வைத்து சுழற்றியதும், அலங்கார வீச்சை சுற்றியதும் அரங்கத்தையே அதிரவைத்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.

இது குறித்து போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் கூறுகையில், தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்கு எங்களுக்கு வசதி இல்லை. எனவே தமிழக அரசு எங்களைப் போன்ற மாணவிகளையும் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் கலந்து கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றனர்.




