• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி..,

ByK Kaliraj

Jun 10, 2025

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கே.டிராஜேந்திர பாலாஜி பேசியதாவது:

தற்போது வெற்றி அதிமுக அருகிலுள்ளது. தமிழக முதலமைச்சர் நாற்காலி எடப்பாடி பழனிச்சாமி பக்கத்திலுள்ளது. அந்த நாற்காலியில் எடப்பாடி அமர்வது தான் பாக்கி. வெற்றி நமது இலக்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதேபோன்று நாம் வெற்றியின் இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். இதனால் திமுக பதறுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு கை- கால் உதறுகிறது.

அதிமுக மிகவும் பலம் பொருந்திய கட்சி. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிப்பதில் அதிமுக போன்று தமிழகத்தில் எந்த கட்சியும் செயல்பட்டதாக வரலாறு கிடையாது. ஒரு முறை திமுக ஆட்சியில் இருந்தால் அடுத்த தடவை 20 சீட்டுக்கு மேல் வெற்றி பெறாது. 2026 தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிக்கு மேல் வராது என்பதை இந்த உலகம் அறியப்போகிறது.

தமிழக மக்கள் அதிமுக பக்கம் இருக்கின்றனர்.8- கோடி தமிழ்ச் சமுதாயமும், அயலகத் தமிழர்களும் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி தந்த எடப்பாடி பழனிச்சாமியை நம்பி அவரது ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் வர வேண்டுமென எண்ணுகின்றனர். 2026 தேர்தலுக்காக அற்புதமான கூட்டணியை அமைத்து வெற்றியின் இலக்கை நோக்கி எடப்பாடி பழனிச்சாமி சென்று கொண்டிருக்கிறார். தற்போது மதவாதம் வரலாமா? இனவாதம் வரலாமா? என பலரும் எண்ணுகின்றனர். எங்களுக்கு அறிவுரை சொல்ல யாருக்கும் யோக்கியதே கிடையாது.

அதிமுகவினருக்கு அறிவாற்றல் திறமை தெம்பு உண்டு. எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிச்சாமி இருக்க மாட்டார். வகுப்புவாதம், மதவாதம், என்று சொல்லி சிறுபான்மை மக்களை அதிமுகவிலிருந்து பிரிக்க திமுக திட்டம் போடுகிறது. அதிமுகவுக்கு நல்லதை சொல்வதைப் போல கெடுதல் செய்ய திமுக கூட்டணி கட்சிகள் நினைக்கிறது. அவர்கள் போடுகின்ற வேசமெல்லாம் இங்கு நடக்காது.

மத்தியில் ஆளும் பாஜகவினர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று எங்கே? சொன்னார்கள். யார் சொன்னது? தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தான். தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று சொன்னால்தான் அதிமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும். ஆன்மீகத்தின் அடையாளமாக இருக்கக்கூடிய கட்சி தான் அதிமுக. ஈழத் தமிழன் பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி. ஒன்றுமில்லாத பானையை வைத்து உருட்டினாலும் அது வெள்ளிச் செம்பாகாது. பித்தளை வெள்ளியாக மாறாது. அதிமுக ஒரு அற்புதமான அணையாத விளக்கு. திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே நான் பட்ட கஷ்டங்களில் பாதி தான் மற்றவர்களுக்கு தெரியும். மீதி கஷ்டங்களை நான் வெளியே சொல்வது கிடையாது. திமுக என்ற மிருகத்தை அடித்து நொறுக்கும் பணியை நாம் செய்ய வேண்டும்.

என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு. நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா? ஓரம் போய்விட்டேனா? அல்லது சோர்ந்து விட்டேனா? திமுக என்ற தீய சக்தியை நாட்டை விட்டு விரட்டும் வரை நான் ஓய மாட்டேன்! உறங்க மாட்டேன்!!. அதிமுகவினர்களை பல்வேறு வகைகளில் அடக்கி, ஒடுக்கி, மிரட்டி கட்சியை விட்டு வெளியேறச் செய்து, கட்சிப் பணி செய்யவிடாமல் தடுத்து விடலாம் என்று எண்ணினால் உங்கள் கனவு பகல் கனவாகும். அந்த உங்கள் எண்ணங்களை சுக்கு நூறாக உடைத்து நோக்குவது தான் எங்களது நோக்கம்.

அதிமுகவினர் சிங்கம்- புலி போன்ற வைகளுக்கு நிகரானவர்கள். யாரிடமும் பிரச்சனைக்கு போக மாட்டார்கள். அதிமுகவினரோடு விளையாட்டு காட்டினால் அதன் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்பதை திமுகவும் அதனைச் சார்ந்த மாற்றுக் கட்சியினர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற திமிரில் தற்போது பல வேலைகளை செய்கின்றீர்கள். கே டி ஆர் ஐ ( என்னை) சிறைச்சாலைக்கு அனுப்பி விடலாமா? அதற்கு இடமளிக்கிறதா? என சிந்திக்கிறீர்கள். அது ஒரு காலமும் முடியாது. என்னிடம் நியாயம், தர்மம் இருக்கிறது. நான் யாரையும் ஏமாற்றியதாக வரலாறு கிடையாது.

தற்போது திமுக ஆட்சியில் நடக்கும் அட்டூழியங்களை பார்க்கிறோம். வீடியோ வெளிச்சத்தை பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விடியல் என்கிறார். ஒருவேளை உணவு மக்கள் என்று வயிறார சாப்பிடுகின்றனரோ அன்றுதான் உண்மையான விடியல் என்று தமிழகத்தின் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கூறினார். என்றார்.

அரசியல் டுடே வார இதழில் சமூக நீதி என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வருகிறேன் அதனை தமிழக மக்களும் அதிமுக கட்சியினரும் அவசியம் படிக்க வேண்டும் என கூறினார்.

பூத்து கமிட்டி கூட்டத்தில் மேற்கு மாவட்ட பூத்து கமிட்டி பொறுப்பாளர் ஜான் மகேந்திரன், முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன், முன்னாள் எம்எல்ஏ சந்திர பிரபா முத்தையா, ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்யராஜ், பாலாஜி, மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்டச் சேர்ந்த அதிமுக பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.