• Wed. Mar 19th, 2025

24 லேப்டாப்களைத் திருடிய முன்னாள் பெண் வங்கி ஊழியர்

Byவிஷா

Mar 29, 2024

பெங்களூருவில் உள்ள ஒரு ஐசிஐசிஐ வங்கியில், நல்ல வேலையில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் பல இடங்களில் 24 விலை உயர்ந்த லேப்டாப்களைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மாநகர போலீசாருக்கு, பிரபல ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் வந்து தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள் என அடுத்தடுத்து, அறைகளில் இருந்த தங்களது விலை உயர்ந்த லேப் டாப்கள் திருடப்பட்டதாக தொடர்ந்து புகார் வந்தது. இந்த புகார்கள், பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து கோரமங்களா, எச்ஏஎல், இந்திரா நகர் காவல் நிலையங்களில் அடுத்தடுத்து வந்து கொண்டிருந்தன. அனைத்து புகார்களிலுமே லேப் டாப்கள் திருடு போனதாக இருந்த நிலையில், இது குறித்த தீவிர விசாரணையில் போலீசர் இறங்கினார்கள். தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பி.தயானந்தா போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இளம் பெண் ஒருவர், லேப் டாப் திருடுவது சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இளம்பெண்ணின் அடையாளம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பெங்களூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் பணிபுரிந்த ஜெஸ்ஸி அகர்வால் இப்படி ஹோட்டல்களிலும், தங்கும் விடுதிகளிலும் லேப் டாப்களைத் திருடியது தெரியவந்தது.
ஜெஸ்ஸி அகர்வால் காலையில் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் இருந்து மடிக்கணினிகளை திருடியுள்ளார். அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள 24 மடிக்கணினிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர் பி.தயானந்தா தெரிவித்தார். மேலும், “ஜெஸ்ஸி அகர்வால் ராஜஸ்தானை சேர்ந்தவர். முன்பு வங்கியில் பகுதிநேர வேலை செய்து வந்தார். லேப்டாப் திருடியதற்காக கைது செய்யப்பட்டார்” என்றும் அவர் கூறினார். பெங்களூருவில் பெண் வங்கி முன்னாள் ஊழியர் ஒருவர் விலை உயர்ந்த லேப்டாப்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.