சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு ஏற்பட்டது.
இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூர் திரும்பிச் சென்றது. டெல்லி, மும்பை, மதுரை, கொச்சி, பெங்களூர், கோவா உள்ளிட்ட பத்து விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருக்கிறது.
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் அபுதாபி மஸ்கட் டெல்லி மும்பை ஹைதராபாத் பெங்களூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை 3 மணியிலிருந்து திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகின. இலங்கையில் இருந்து 149 பயணிகளுடன் சென்னைக்கு தரையிறங்க வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பலத்த சூறைக்காற்று மழை காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
அதைப்போல் சென்னையில் தரையிறங்க வந்த டெல்லி, மும்பை, கொச்சி, கோவா, மதுரை, திருச்சி, பெங்களூர் உள்ளிட்ட சுமார் பத்து விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. அதன் பின்பு மழை சிறிது ஓய்ந்ததும், அந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தாமதமாக தரையிறங்கின.
அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அபுதாபி, மஸ்கட், டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூர், தூத்துக்குடி, சீரடி உள்ளிட்ட பத்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்று கொண்டு இருக்கின்றன.
இந்த விமானங்கள் திடீர் தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையாக தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படாத காரணத்தால், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வெப்ப சலனம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் மழைக்கே இதைப்போல் விமானங்கள் தாமதம் ஆவதோடு, சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூர் திருப்பி அனுப்பும் நிலை ஏற்படுகிறது. வருகின்ற பருவமழை காலத்தில் சென்னை விமான நிலையம் எந்த நிலையில் இருக்கும் என்று பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர்.