குமரி ஆரோக்கியம்புரம் முதல் நீரோடி வரை 42- மீனவ கிராம மக்கள்
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு, நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 49 மீனவ கிராமங்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் இந்திய அரியவகை மணல் ஆலை மணவாளக்குறிச்சி சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் இருந்து பலவருடங்களாக மணலை எடுத்து அதிலிருக்கும் கனிமங்களை பிரித்தெடுத்து வரும் நிலையில், தற்போது கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட மிடாலம் முதல் நீரோடி வரை உள்ள 1144 ஹெக்டர் பரப்பளவில் இருக்கும் அரியவகை மணலை எடுப்பதாக கூறி அதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப் போவதாக பத்திரிக்கைகளில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நாள் முதல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள மீனவ மக்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி நடத்துவதாக இருந்த மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்ததாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் .
இருந்தும் மீனவ மக்கள் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நிரந்தரமாக கைவிடக் கோரியும் மணல் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் போராட்டங்களை நடத்தி வந்ததோடு மத்திய மாநில அரசு துறை அதிகாரிகளுக்கு தபால்கள் அனுப்பியும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் ஒட்டுமொத்த மீனவ மக்களும் சமவெளி மக்களும் ஒன்று திரண்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக
நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான 49 மீனவ கிராமங்கள் உட்பட 250 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.




