பிரபல வரலாற்று ஆசிரியரும், மராட்டிய எழுத்தாளருமான பத்ம விபூஷன் விருது பெற்ற பாபாசாகேப் புரந்தரே இன்று காலமானார். அவருக்கு வயது 99.மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து தனது படைப்புகள் மூலம் புகழ் பெற்றவர் பல்வந்த் மோரேஷ்வர் புரந்தரே என்கிற பாபாசாகேப் புரந்தரே. வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான இவர், 2019-ம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய குடிமகன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றார்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நிமோனியாவால் பாதிக்கப்பட்ட புரந்தரே, புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணத்தால் அவரது உடல், மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை அடுத்து அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து, புரந்தரேவின் உடல் நிலை நேற்று மேலும் மோசமானதை அடுத்து, இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு வேதனைப்படுகிறேன். ஷிவ்ஷாஹிர் பாபாசாகேப் புரந்தரேவின் மறைவு, வரலாறு மற்றும் கலாச்சார உலகில் ஒரு பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. வரும் தலைமுறையினர் சத்ரபதி சிவாஜி மகாராஜுடன் மேலும் இணைந்திருப்பதற்கு அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் நினைவுகூரப்படும்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.