கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக நடைபெற்ற, சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் அனைத்து மத தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பாக மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளையும் சமத்துவ விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக போத்தனூர் சாலையில் உள்ள பாத்திமாகனி மண்டபத்தில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.ராமசாமி, துணை தலைவர் எஸ்.ஏ.பஷீர் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், மாநில சிறுபான்மை துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா, பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்,சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கிறிஸ்தவ பாதிரியார்கள் ஜான் ஜோசப் ஸ்தனிஸ், ஜார்ஜ் தனசேகர், கோவை மாநகர ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் முகம்மது அய்யூப், அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட இந்து மடாதிபதிகள், இஸ்லாமிய குருமார்கள், கிறிஸ்தவ ஃபாதர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், முன்னதாக அனைத்து மத தலைவர்கள் இணைந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறினர். நிகழ்ச்சியில், தையல் இயந்திரம், அரிசி, மளிகை போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மருத்துவ சேவை, சிறந்த சமுதாய சேவை, மற்றும் அண்மையில் சென்னையில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.