நாளை தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. அனைத்து தொழில் முனைவோரும் தங்கள் கடைகள், சுத்தம் செய்து மாலை அலங்காரம் செய்து பூஜை செய்வது வழக்கம். வீடுகளிலும் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
இதனால் ஆயுத பூஜையன்று பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் இன்று முதலே பூக்களின் வரத்து களைகட்டியுள்ளது. திருச்சி பூ மார்க்கெட், மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் என அனைத்து முக்கிய மார்க்கெட்டுகளிலும் பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. திருச்சி பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1,500க்கு விற்பனையாகி வருகிறது. பட்டன் ரோஸ் ரூ.250க்கும், சம்பங்கி ரூ.300க்கும், செவ்வந்தி ரூ.300க்கும் விற்பனையாகி வருகிறது. முல்லைப்பூ அதிகபட்சமாக ரூ.800 வரை விற்பனையாகிறது. பூக்கள் வரத்து மற்றும் விற்பனை அதிகரித்துள்ளதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.