மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாப்டூர் பெரிய கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கின்றனர்.
சதுரகிரி மலை மற்றும் சாப்டூர் கேனி மலை பகுதியில் பெய்யும் மழைநீர் சாப்டூர் பெரிய கண்மாய்க்கு வந்து நிரம்பி மறுகால் வழியாக மற்ற அனைத்து கண்மாய்களுக்கும் சென்று வருகிறது.
இதனிடையே சாப்டூர் கண்மாயிலிருந்து மறுகால் செல்லும் கால்வாயை ஆக்கிரமித்து வழித்தடமே இல்லாமல் அழித்ததால் கண்மாயிலிருந்து வெளியேறும் மழைநீர் கண்மாய் அருகே உள்ள வடகரைப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் வழியாக செல்வதோடு, விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மானாவாரி பயிர்களான சோளம், திணை உள்ளிட்ட பயிர்களையும், வாழை, தென்னை உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் செல்ல வழித்தடம் அமைத்து தர, பலமுறை மனு அளித்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் தனது விவசாய நிலத்தில் உள்ள அனைத்தும் பயிர்களும் சேதமடைந்துவிட்டதாகவும், வாழ்வாதரம் இழந்து தவிக்கும் தனக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, விரைவில் கால்வாய் ஆக்கிரமிப்பை சரி செய்து, நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என விவசாயி தங்கராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.