வீணாக அரசியல் பேசுவதை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை ஒடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிக்க மத்திய பாஜக அரசே காரணம் என தமிழக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியிருந்தார். இது பாஜகவினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், அமைச்சர் பொன்முடியின் கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலளித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் கடமை மாநில அரசுக்கே இருக்கிறது. கஞ்சா போதைப்பொருள் விவகாரத்தில் வீணான அரசியல் செய்வதை தவிர்த்துவிட்டு, அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாநில அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறான பாதைக்கு செல்லும் இளைஞர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.