மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 9) திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப். 1-ம் தேதி தாக்கல் செய்தார். பல்வேறு அமளிகளுக்கு மத்தியில் கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 13 அன்று நிறைடைந்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பங்கேற்க உள்ள திமுக எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம். நாளை ( மார்ச் 9) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டம் தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அதுபோது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.
மும்மொழிக் கொள்கை என இந்தித் திணிப்பு, தொகுதி மறுவரையறை விவகாரங்கள் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக விவாதத்தை கிளப்ப தயாராகி வருகிறது. அப்படியான சூழலில் திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.








