மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் அமைந்துள்ளது சித்திரை ரத வல்லபபெருமாள் கோவில். இந்த கோவிலின் கிழக்குப் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் சுயம்புவாக குருபகவான் காட்சியளிக்கிறார்.
குருபகவானை தரிசிக்க வாரம் தோறும் வியாழக்கிழமை அன்று மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்கள் மதுரை வந்து சோழவந்தான் வழியாக குருவித்துறைக்கு வந்து அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள குரு பகவான் கோவிலுக்கு ஆட்டோகளிலும், நடைபயணமாகவும் சென்று வருகின்றனர்.

இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில்.., மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை குரு பகவான் கோவிலுக்கு வாரம்தோறும் வியாழக்கிழமை பேருந்து வசதி செய்து தர வேண்டும் என அரசு போக்குவரத்து கழகத்தினரிடம் கடிதம் கொடுத்த பின்பும், இதுவரை பேருந்து வசதி செய்து தரவில்லை. இதனால் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். பேருந்து வசதி இல்லாததால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து வருகிறது.
குருவித்துறையில் இருந்து கோவிலுக்கு இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளதால் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையும் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆகையால் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வியாழக்கிழமை தோறும் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறை கோவில் வாசலுக்கு பேருந்து வசதியை செய்து தர வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
