ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு வசதியாக, யு.பி.ஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்;, பயன்படுத்தாத யு.பி.ஐ செயலிகளை முடக்க இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வீட்டு வாடகை முதல் கரண்ட் பில், கேஸ் பில் போன்ற அனைத்தையும் ஆன்லைன் மூலமே அதிக அளவில் செலுத்திவிடுகிறோம். நாம் பல வகையான ஆன்லைன் கட்டண செயலிகளை பயன்படுத்துகிறோம். அவற்றில் அதிக அளவில் பயன்படுத்தும் செயலி என்றால் அது யு.பி.ஐ தான். தற்போது உள்ள சூழலில் நம் நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது, எந்த அளவுக்கு என்றால் பெரிய கடைகள் தொடங்கி சாலையோர கடைகளில் கூட க்யூ ஆர் கோடு மூலம் பேமெண்ட் செய்யும் வசதி உள்ளது.
அதிலும் குறிப்பாக பேமெண்ட் செய்ய கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற யு.பி.ஐ. செயலிகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் செயலற்று இருக்கும் யு.பி.ஐ ஐடிகளை 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முடக்கவுள்ளதாக இந்திய தேசிய கட்டணக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் யு.பி.ஐ அப்ளிகேஷனில் வங்கி கணக்கை இணைத்து ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த வித பணபரிவர்த்தனையும் செய்யாமல் இருக்கும் யு.பி.ஐ. ஐடி – க்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் செயலிழந்துவிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காலக்கெடு முடிய 10 நாட்கள் மட்டுமே மீதம் உள்ளது. எனவே ஒருவருட காலமாக பயன்படுத்தாத ஐடி-க்களில் உடனடியாக பரிவர்த்தனை செய்து ஐடி முடக்கப்படுவதைத் தவிர்க்கவும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.