அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நுழைவுவாயில் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு விரிவுரையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் விரிவுரையாளர்கள் வெங்கடேசன், மணிகண்டன், குணசுந்தரி, புகழேந்தி, பி.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அனைத்து அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கும் பி.எப்., இ.பி.எப். உள்ளிட்ட நலன்கள் வழங்க வேண்டும், 12 மாத சம்பளம் வழங்க வேண்டும், யு.ஜி.சி. நிர்ணயித்த ரூ.57,800 ஊதியத்தை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற விரிவுரையாளர்களுக்கு ரூ.25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், பெண் கவுரவ விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்த் கலந்து கொண்டு, கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளுக்கு தனது ஆதரவினை தெரிவித்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என வாழ்த்தி உரையாற்றினார்.






