கோவையில் பீஃப் கடை நடத்திய தம்பதியினரை மிரட்டிய பாஜக நிர்வாகி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் உடையாம்பாளையம் பகுதியில் தள்ளுவண்டியில் தம்பதியினர் பீஃப் கடை நடத்தி வந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சுப்ரமணி என்பவர் பீஃப் கடை நடத்தக்கூடாது என தம்பதியினருக்கு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையரிடம் மிரட்டலுக்கு உள்ளான தம்பதியினர் மனு அளித்தனர்.
இதன்பின் பீஃப் கடையின் உரிமையாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பீஃப் கடையை எடுக்கச் சொல்லி சுப்ரமணி என்னை பலமுறை மிரட்டினார். சில நபர்களுடன் வந்தும் எனக்கு மிரட்டல் விடுத்தார். அதற்குப் பயந்து தான், நான் ஆதரத்திற்காக வீடியோ எடுத்தேன். அவர் சொல்வது போல ஊர் கட்டுப்பாடு என்பதெல்லாம் பொய். இந்த ஊரில் சாதிப் பிரச்சினை அதிகமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் எல்லோரிடம் அனுமதி பெற்றுதான் நான் கடை போட்டேன்” என்று தெரிவித்தார்.
நேற்று இரவு 12 மணியளவில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் “ஏன் வீடியோ எடுத்தீர்கள்? யாருக்கெல்லாம் வீடியோ கொடுத்தீர்கள்” என்று மிரட்டும் பாணியில் பேசியதாக தம்பதியினர் குற்றம் சாட்டினர். மேலும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனவும் மீண்டும் அதே இடத்தில் கடை போட அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், தம்பதியினருக்கு மிரட்டல் விடுத்த சுப்ரமணி மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.