சென்னையில் ஏரி வாரியாக சாலையோர வியாபாரிகளுக்கு சிப் வசதி, க்யூ ஆர் கோடு மற்றும் இணைய வசதியுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்தும் வகையில் சிப் வசதி, க்யூ ஆர் கோடு மற்றும் இணைய இணைப்பு பயன்பாட்டுடன் கூடிய புதிய அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம்கள் இன்று நவம்பர் 22ம் தேதி முதல் 30.11.2024 வரை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் விற்பனையை ஒழுங்குமுறைப்படுத்துதல், சட்டம் மற்றும் விதிகளை பின்பற்றி நகர விற்பனைக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்ட 35,588 சாலையோர வியாபாரிகளின் விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட சிறப்பு முகாம்களில் மாநகராட்சியால் வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி அனுப்பப்படும் எனவும், அந்த கைபேசி எண் மாநகராட்சி பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, பழைய அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நாளை சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்கும் முகாம்
