தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன் என பாரதிய ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் டெல்லி செல்கின்றனர்.
அங்கு அவர்கள் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பதோடு, பிரதமரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர். இதற்காக சென்னை விமான நிலையம் வந்த அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அகில இந்திய பாரத ஜனதா கட்சி தமிழகத்திற்கு எத்தனையோ பெருமையை சேர்த்திருக்கிறது. அதில் எல்லாம் மணிமகுடமாக, தமிழ் மண்ணைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக ஆக்கி பெருமை சேர்த்திருக்கிறது என தெரிவித்தார்.
அத்துடன் தமிழரை வேட்பாளராக அறிவித்ததற்காக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேசமயம், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் கட்சி வேறுபாடு இன்றி ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இது குறித்து தமிழக முதலமைச்சரிடம் ஒரு கடிதம் கொடுத்திருப்பதாக கூறினார். இந்திய கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது அவர்களுடைய கட்சியின் விருப்பம் அதில் நாம் எடுத்துக்கொள்ள முடியாது.
இருந்தாலும் இது தமிழகத்திற்கு பெருமை கொடுக்கக்கூடிய விஷயம் எனவே அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் வைக்கிறோம்.
ஆதரவு கொடுப்பதும் கொடுக்காமல் இருப்பதும் அவர்களுடைய விருப்பம். ஆனால் தமிழருக்கும் தமிழ்நாட்டிற்கும் எல்லாம் செய்கிறோம் என்று முதல்வர் கூறக்கூடிய இந்த சூழலில் ஆதரவு கொடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.