மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்தவர் குரும்பன். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநரான இவர் இயற்கை விவசாயத்தையும் செய்து வருகிறார்.
பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக பாரம்பரிய நெல் ரகங்களான தில்லை நாயகம், தாய்லாந்து கருப்பு கவுனி நெல் வகைகளை தனது தோட்டத்தில் இயற்கை முறையில் விளைவித்து சாதனை படைத்துள்ளார்.
குறைந்த அளவிலான இடத்தில் சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்ட இந்த தில்லை நாயகம் நெல் வகை சுமார் 6 அடி வரை வளர்ந்து நல்ல மகசூலை கொடுத்துள்ளதாகவும், கடந்த மழை காலத்திலும் எந்த பாதிப்பும் இன்றி விரைவில் அறுவடைக்கு தயாராக உள்ளதாகவும், இதே போன்று தாய்லாந்து, கருப்பு கவுனி நெல்லும் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகிவிட்டதாக விவசாயி கும்பன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும் பெரிய அளவில் தண்ணீர் கூட பாய்ச்சவில்லை என்றும், இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தியதால் சுமார் 150 நாட்களில் இந்த பாரம்பரிய நெல் வகைகள் விளைந்துள்ளதாகவும், வேளாண் அதிகாரிகளும் நேரில் வந்து ஆய்வு செய்து பாராட்டியதுடன் இந்த நெல் வகைகளை தாங்களே கொள்முதல் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளதால் குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தை பாரம்பரிய நெல் மூலம் பெற உள்ளதாக குரும்பன் தெரிவித்தார்.