இந்தியாவிலேயே தமிழகத்தில் தொழில் வளர்ச்சி அதிகரித்து இருப்பதால் பேங்க் ஆப் மகாராஷ்டிரா தனது சிறு குறு தொழில்களுக்கான கடன்களை தமிழகத்தில் அதிகரித்து வருவதாக வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ராஜீவ் கோவையில் தெரிவித்துள்ளார்.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சென்னைக்கு அடுத்தபடியாக தனது மண்டல அலுவலகத்தை கோவையில் துவங்க உள்ளது. இந்நிலையில் வங்கியின் செயல்பாடு குறித்து, வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஏ.எஸ். ராஜீவ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர்,இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா இந்தியா முழுவதும் 2400 கிளைகள் மூலம் 27 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்தில் சேவை செய்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்த வரை,80 கிளைகள் தற்போது செயல்படுவதாக கூறிய அவர், விரைவில் இன்னும் கூடுதலாக 20 கிளைகளை துவக்க உள்ளதாக தெரிவித்தார். வங்கியின் வணிகத்தை பொறுத்த மட்டில் சென்னை மண்டலத்தில் 20,000 கோடி வர்த்தகம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், கோவை மண்டலத்தில் மூவாயிரம் கோடி என மொத்தம் 23,000 கோடி ரூபாய் வணிகம் நடைபெறுவதாகவும்,அடுத்த கட்டமாக தமிழகத்தில் இந்த வணிகத்தை முப்பதாயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பதே இலக்கு என குறிப்பிட்டார். தொழில் வளர்ச்சியில் கோவை வேகமாக வளர்ந்து வருவதால்,இங்கு மண்டல அலுவலகம் துவங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இந்தியாவிலேயே முன்னனி மாநிலமாக தமிழகத்தில் ஜி.டி.பி.வளர்ச்சி நன்றாக இருப்பதாக தெரிவித்தார். சிறு குறு தொழில்களை பொறுத்த வரை ஆயிரத்தி இருநூறு கோடி அளவில் கோவையில் வணிகம் நடப்பதாக கூறிய அவர், கோவையில் தொழில் வளர்ச்சி அடைந்து வருவதால் மூவாயி்ம் கோடி ரூபாயாக அதிகப்படுத்த் உள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவிலேயே சிறு குறு தொழில்கள் வளர்ச்சியில் தமிழகம் முதன்மையாக இருப்பதாக கூறிய அவர், அதனால் சிறு குறு கடன்களில் தங்களது வங்கி தமிழகத்தில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது, மண்டல மேலாளர் ஷிபு ஜேக்கப், துணை மண்டல மேலாளர் ராஜூ ஆகியோர் உடனருந்தனர்.