ஆந்திராவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் இலங்கையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழுவாக முதல் முறையாக நீந்தி சாதனை படைத்துள்ளனர்.
இந்த நீச்சல் வீரர்கள், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை, பாதுகாப்புதுறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தனர்.
இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் நேற்று இரவு இலங்கை தலைமன்னாரில் இருந்து நீந்த ஆரம்பித்து இன்று காலை தனுஷ்கோடி வரை நீந்தி வந்து சாதனை படைத்தனர். சாத்விக்(15), அலங்குருதிக் (13) ஜார்ஜ் (15), ஜான்சன் (12), பேபிஸ் வந்தனா (17), பிரான்ஸ் ராகுல் (18) ஆகிய ஆறு பள்ளி மாணவ மாணவிகள் (4 மாணவர்கள், 2 மாணவிகள்) இணைந்து இந்த சாதனையை படைத்துள்ளனர். இவர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி அன்று இரவு நீந்த தயாராகினர். காலநிலை மாற்றத்தால் இவர்கள் நீந்துவதற்கு அனுமதி கிடைக்காததால் நேற்று இரவு காலநிலை சரியான பின் நீந்த ஆரம்பித்தனர்.
இதையடுத்து, நேற்று இரவு 1 மணிக்கு இலங்கையில் தலைமன்னாரில் இருந்து நீந்த ஆரம்பித்து 9 மணிநேரம் 27 நிமிடங்கள் வரை நீந்தி இன்று காலை 10:30 மணிக்கு தனுஷ்கோடி வந்தனர்.