ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் கோவையை சேர்ந்த ஸ்டார்ட் அப் இன்குபேட்டர் நிறுவனமான ஆலமரம், 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முன்னேறி உள்ளதை கொண்டாடும் விதமாகவும், இந்த நிறுவனங்கள் வழங்கக்கூடிய சேவைகள்/பொருட்கள் பற்றி எடுத்துரைக்கவும் ‘ டெமோ டே’ எனும் நிகழ்வை நடத்தியது.

இந்த நிகழ்வில் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஜோ ஹோ கார்ப்- பின் (ZohoCorp) இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருடன் ஆலமரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அம்பி மூர்த்தி, பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இதற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வில் அம்பி மூர்த்தி பேசுகையில், கோ ஜென் எனும் தனது நிறுவனத்தின் உதவியால் இயங்கும் ஆலமரம், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான பணி இடத்தையும் வழங்கி உதவி வருவதாக கூறினார். இந்த வாய்ப்பை கிராமப்புறங்களில் இருந்து வரும் முதல்-தலைமுறை தொழில்முனைவோர்களுக்கு ஆலமரம் வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை ஆலமரத்தில் 23 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுபோல பயனடைந்து உள்ளது என்றும் அதில் 5 நிறுவனங்கள் பெண் தொழில்முனைவோரால் நிறுவப்பட்டது எனவும், கூறினார்.