தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறை முழுக்க முழுக்க கணிணி மயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் எளிமையாக பத்திரப்பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தாங்கள் விரும்பும்நாளில், விரும்பும் நேரத்தில் பதிவு மேற்கொள்ளலாம். அத்துடன் வசதிப்படும் நேரத்தில் டோக்கன் மூலம் பதிவு செய்யவும் கூடுதல் நேரங்களும் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதன்படி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் தினமும் 100 டோக்கன்களும் 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 200 டோக்கன்களும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சுபமுகூர்த்தநாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடக்கும். இதனால் சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முகூர்த்த நாட்களில் பதிவுத்துறை கூடுதல் நேரம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்களில் அரசு விடுமுறை வந்தாலும் கூட அலுவலகத்தை செயல்பட வைக்கும் நிகழ்வுகளும் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில் டிசம்பர் 14ம் தேதியான இன்று முகூர்த்த தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு என்பது அதிகம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அதிகமான மக்கள் பயன்பெற வாய்ப்புள்ளது. இதன்படி பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களின் நலன்கருதி வழக்கமாக வழங்கும் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளதாக பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.