கோவை, தடாகம், தாளியூர் பகுதியில் உணவு தேடி வீட்டை சேதப்படுத்திய குட்டியுடன் வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தடாகம் பகுதியையொட்டி வனப் பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் விளை நிலங்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளன. தடாகம் அடுத்த தாளியூர் சேர்ந்தவர் தென்னை மரம் ஏறும் தொழிலாளி நடராஜன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று குட்டியுடன் அப்பகுதியில் புகுந்தது. அந்த யானை உணவு தேடி அங்கும், மிங்கும் சுற்றி திரிந்தது. பின்னர் வீட்டின் அருகே சென்ற காட்டு யானை வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து உள்ளே நுழைந்த காட்டு யானை அங்கு வைக்கப்பட்டு இருந்த காய் கறிகளை உண்டது. ஆனால் யானையால் மேற்கொண்டு வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. இதனால் யானை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் தேசப்படுத்தியது. அதேபோன்று அருகில் தங்கி இருந்த பணியாளர்கள் ருக்மணி, பழனிசாமி அறையில் கதவை உடைத்து உள்ளே நுழைந்ததால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் யானை குட்டியுடன் அங்குமிங்கும் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.