கால்நடைகளுக்கு உலர வைத்த தீவனத்தை காட்டு யானை கூட்டம் குட்டியுடன் வந்து தின்று செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகின.
மருதமலை, வடவள்ளி, தடாகம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஊருக்குள்ளும், விளை நிலங்களுக்குள் உணவு தேடி வரும் யானைகள் சேதத்தை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு தடாகம் அருகே உள்ள கரடிமடை பிரிவு, மங்களபாளையம் பகுதியில் குட்டியுடன் ஐந்து யானைகள் கொண்ட யானை கூட்டம் அப்பகுதியில் மூடப்பட்ட உள்ள செங்கல் சூளையில் அருகே இருந்த விவசாயி ஒருவர் கால்நடைகளுக்கு கொடுக்கும் தீவனத்தை உலர வைத்து இருந்தார். அதனை குட்டியுடன் வந்த அந்த யானை கூட்டம் தின்று கொண்டு இருந்த போது, வனத் துறையினரின் ரோந்து வாகனத்தில் ஒலி எழுப்பும் சத்தம் கேட்டு, அங்கு இருந்து வனப் பகுதிக்கு செல்லும் காட்டு யானைக் கூட்டத்தின் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் அதில் இருட்டுப்பள்ளம், பெருமாள்கோவில்பதி, வளையான்குட்டை, முண்டாந்துறை ஆகிய ஊர்களுக்குச் இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், தனியாக நடந்து செல்வதை தவிர்க்குமாறும் வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.