ஆத்தூர் தாலுகா, பெரும்பாறை அருகே, புல்லாவெளி நீர்வீழ்ச்சியில், போட்டோ எடுக்கச் சென்ற இளைஞர் கடந்த 3-ம் தேதி புதன்கிழமை காலையில் தடுமாறி அருவியில் விழுந்து பலியானார். அவரது உடலை தேடும் பணி தொடந்து 6-வது நாளாக நடைபெற்று வந்தது. இன்று (ஆகஸ்ட் 9) அவரை சடலமாக மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி மேலசத்திரத்தை சேர்ந்தவர் நாகநாதசேதுபதி. இவரது மகன் அஜய்பாண்டியன் (28) இவர், திண்டுக்கல் மாவட்டம், மங்களம்கொம்பு பகுதியில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வந்தார். ராமநாதபுரம், சத்திரத்தை சேர்ந்த பாண்டி மகன் கல்யாணசுந்தரம் (25) நண்பன் அஜய்பாண்டியனை பார்க்க கடந்த 31-ம் தேதி மங்களம்கொம்புக்கு வந்துள்ளார். ஆடி 18-டை முன்னிட்டு, கடந்த 3-ம் தேதி புதன்கிழமை இருவரும், பெரும்பாறை அருகே உள்ள, புல்லாவெளி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அங்கு அஜய்பாண்டியன் நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள பாறையில் இறங்கினார். அதனை கல்யாணசுந்தரம் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது, அவர் பாறையில் கொஞ்சம், கொஞ்சமாக கீழே இறங்கினார். திடீரென, பாறையில் வலுக்கி விழுந்து, தண்ணீர் இழுத்து சென்றது. உடனடியாக தாண்டிக்குடி போலீசாருக்கும், ஆத்தூர் தீயணைப்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. ஆத்தூர் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் அவரது உடலை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை 6-வது நாளாக, திண்டுக்கல், ஆத்தூர், வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் ஆகிய 4 தீயணைப்பு படை வீரர்களின் குழுக்கள், புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் இருந்து, ஆத்தூர் காமராஜர் அணை அருகே கன்னிமார் கோவில் என்ற இடம் வரை வாலிபரின் உடலை தேடி வந்தனர்.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நீர்வீழ்ச்சியில், தவறி விழுந்த வாலிபரின் உடலை 6-வது நாளாக, இன்று செவ்வாய்கிழமை நீர்வீழ்ச்சி பாறை இடுக்குகளில் சிக்கி அஜய்பாண்டியன் உடலை மீட்டனர்.