கோவையின் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவீதி உலா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்து அமைப்பினர் கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
உரிய நேரத்தில் தேரோட்டம் நடத்தப்படாவிட்டால், மாபெரும் ஆர்ப்பாட்டம் வெடிக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுமா ? என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள், பேரூர் கோவில் முன்பு திரண்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
”ஆண்டுதோறும் பாரம்பரியமாக நடைபெறும் திருத்தேர் திருவீதி உலாவை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யவோ ?அல்லது தள்ளிவைக்கவோ ?கூடாது.”
”பங்குனி உத்திர நாளிலேயே தேரோட்டம் நடத்தப்பட வேண்டும்.
அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கைவிட வேண்டும்.”
”உடனடியாகத் தேரோட்டம் குறித்த அறிவிப்பு வராவிட்டால், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.”
இந்நிலையில் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார், “தேரின் உறுதித் தன்மை குறித்துப் பொதுப் பணித்துறை (PWD) ஆய்வு செய்ய வேண்டும். அவர்கள் பாதுகாப்பு அறிக்கையைச் சமர்ப்பித்த பின்னரே தேரோட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்க முடியும்” எனத் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், “தேரோட்டத்திற்கான பணிகளை முன் கூட்டியே செய்து இருக்க வேண்டும்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேரூர் – தொண்டாமுத்தூர் சாலையில் போக்குவரத்துப் பாதித்து பரபரப்பு நிலவி வருகிறது.




