நற்றிணைப் பாடல் 50:
அறியாமையின், அன்னை! அஞ்சி,
குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்
விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,
நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடை
நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,
”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,
”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,
”நாண் இலை, எலுவ!” என்று வந்திசினே
செறுநரும் விழையும் செம்மலோன் என,
நறு நுதல் அரிவை! போற்றேன்,
சிறுமை பெருமையின் காணாது துணிந்தே.
பாடியவர்: மருதம் பாடிய இளங்கடுக்கோ
திணை: மருதம்
பொருள்:
தாய்க்குத் தெரியாமல் நான் ஆடிவரச் சென்றேன். அப்படிச் செல்லும்போது அங்கே புதியவன் ஒருவன் என்னைக் கட்டிப் பிடித்துவிட்டான். “கேட்போர் இல்லையா, காப்பாற்றுங்கள்” என்று நான் கூச்சலிட்டேன். “உன் மேனியின் பசலை அழகு” என்று பிதற்றினான். “உனக்கு வெட்கம் இல்லையா” என்று அவனைத் திட்டினேன். “அரிவையே! எது சிறுமை, எது பெருமை என்று உணராமல் செய்துவிட்டேன்” என்றான். அவன் சினம் கொள்வோரும் விரும்பும் செம்மாப்பு உடையவன். ஆதலால் கண்டுகொள்ளாமல் இல்லம் திரும்பிவிட்டேன் என்கிறாள் தலைவி.