சென்னையில் தற்போது திடீா் மழையால் விசாகப்பட்டிணத்திலிருந்து சென்னையில் தரையிறங்க வந்த விமானம்,பெங்களூருக்கு திரும்பி சென்றது.கொச்சி,மதுரை உள்ளிட்ட விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதியமும் திடீரென இடி, மின்னல், சூறைக்காற்றுடன், பலத்த மழை பெய்தது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 107 பயணிகளுடன் இன்று பகல் 1:45 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 124 பயணிகளுடன் இன்று பகல் 1:50 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதைப்போல் மதுரையிலிருந்து இன்று பிற்பகல் 2:20 மணிக்கு சென்னையில் தரையிறங்க 94 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானிலே வட்டமடித்துக் கொண்டு இருக்கிறது.
மேலும் சென்னையில் இருந்து கொல்கத்தா, தூத்துக்குடி, கோவை சீரடி, டாக்கா உள்ள உட்பட ஏழு இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்களும் புறப்பட முடியாமல் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் இதுவரையில் 10க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி கொண்டு இருக்கின்றனர்.