மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பகுதியில் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அமுதவள்ளி (60). திருமண ஆகாத மாற்றுத்திறனாளியான இவர், அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் மாலை முதல் இரவு வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.இந்த மின்வெட்டை சாதகமாக பயன்படுத்தி கொண்ட நபர் ஒருவர், தனியாக இருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை அடித்துத் துன்புறுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவும், அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே இச்சம்பவம் குறித்துச் சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பலத்த காயமடைந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், அதே கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (26) என்பவரைக் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் கஞ்சா மற்றும் மது போதையில் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மாற்றுத்திறனாளி மூதாட்டிக்குக் கூட பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையிலும், கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலே நிலவுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மின்தடையைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளி மூதாட்டியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









