கோவையில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி. & சன்ஸ் சாரிட்டீஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழா மற்றும் பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

பிரபல கல்வியாளரும் நிறுவன உருவாக்கத்தில் சிறந்து விளங்கியவருமான ஐ.ஐ.டி.ஆர்.ஏ.எம். ஆளுநர் குழுத் தலைவர்,பேராசிரியர் சுதீர் ஜெயின், பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நடைபெற்ற இரண்டு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வுகளில் பங்கேற்றார்.

செயலாளர் டாக்டர்சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற இதில் சிவில் பொறியியல் துறைத் தலைவர் (பொறுப்பு) பேராசிரியர் சசிவகுமார் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில், ஆசிரியர் மேம்பாடு, நிறுவன வளர்ச்சி மற்றும் கல்வித் தலைமைத்துவம் தொடர்பாக பேராசிரியர் சுதீர் கே. ஜெயினுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடினர்.
மாணவர்களுக்கான நிகழ்விற்கு பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் திலகவதி தலைமை தாங்கினார்.








