• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் என நீதிபதி சரமாரி கேள்வி..,

ByKalamegam Viswanathan

Aug 30, 2026

ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மு க அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் புதியதாக மனநல மற்றும் உடல் தகுதிப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட் போட்டியைப் பார்த்தது மற்றும் தேர்தலில் வாக்களித்ததை சுட்டிக்காட்டி அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை ஏற்று நீதிமன்றம் இந்த முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதுரை கீழவளவு காவல் நிலைய எஃப்.ஐ.ஆர் அடிப்படையில், அமலாக்கத்துறையால் தொடரப்பட்ட சுமார் ₹256.44 கோடி மதிப்பிலான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைத் தடைச் சட்ட (PMLA) வழக்கில் 3-வது குற்றவாளியாக முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் துரைதயாநிதி சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் காரணமாகத் தான் விசாரணையை எதிர்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக துரைதயாநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை அரசு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், 3-வது குற்றவாளிக்கான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றவியல் மனுவில் (Crl.M.P. No.131/2026) ஒரு முக்கிய திருப்பம் தற்போது ஏற்பட்டது:

அமலாக்கத்துறையின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துரைதயாநிதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அவர் வாக்களித்து, அது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். இதிலிருந்து அவர் நலமுடன் இருப்பது தெரியவருவதால், புதுச்சேரி ஜிப்மர் அல்லது எய்ம்ஸ் மருத்துவக் குழு மூலம் அவருக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

குற்றம் சாட்டப்பட்ட துரைதயாநிதி தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மனநலக் குறைபாடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சமூக வலைதளப் படங்களை வைத்து மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிட முடியாது என்றும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மதுரை கூடுதல் மாவட்ட மற்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி S. சண்முகவேல் அவர்கள் அதிரடி உத்தரவை வழங்கினார்:

அந்த உத்தரவில், கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்ப்பதும், தேர்தலில் வாக்களிப்பதும் சாத்தியப்படும்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விசாரணையை எதிர்கொள்வதில் என்ன தடை இருக்க முடியும் எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும் துரைதயாநிதியின் தற்போதைய மனநிலை, புரிந்துகொள்ளும் திறன் மற்றும் உடல் தகுதியை ஆய்வு செய்ய புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர், முதன்மை மனநல மருத்துவர் (Chief Psychiatrist), கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் முதன்மை நரம்பியல் வல்லுநர் (Chief Neurologist) அடங்கிய சிறப்பு மருத்துவக் குழுவை அமைத்து தயாநிதியை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால் துரைதயாநிதியை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்து ஆய்வு செய்யும் அதிகாரமும் ஜிப்மர் இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், அதன் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்திற்கு நேரடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத்துறையின் இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஜிப்மர் மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு துரைதயாநிதி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.