கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகர் பகுதியில் 4 லைன் ஓட்டு வீடுகள் உள்ளன. இதில் தமிழர்கள் மற்றும் வட மாநிலத்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அங்கு குடியிருக்கும் நாகராஜ் என்பவரது வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போது கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் தீ மல மல பரவி அருகில் இருந்த மற்ற வீடுகளிலும் பற்றி எறிய தொடங்கியது.
அப்போது அருகில் இருந்த மற்றொரு வீட்டின் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. சுமார் 2 மணி நேரம் போராடிய தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இதில் நான்கு ஓட்டு வீடுகளும் எரிந்து நாசமாயின. தீ விபத்து ஏற்பட்டதும் அருகில் இருந்த வீட்டார் வெளியில் ஓடி வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இதில் ஒரு வீட்டில் இருந்த 50,000 பணம் மற்றும் நான்கு சவரன் தங்க நகை எரிந்ததாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்து தொடர்பாக விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




