அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட (அலகுகள் 1 & 2) சிறப்பு முகாம் வாலாஜாநகரம் கிராமத்தில் இன்று தொடங்கியது. காலை சமுதாயக்கூடத்தில் தொடங்கிய , இம்முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் சே.சித்ரா தலைமையேற்று இந்த 7 நாட்களில் மாணவர்கள் அனைவரும் மக்களோடு இணைந்து சமூக தொண்டாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மேலும் அவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இதுபோன்ற சமூகப்பணிகளில் ஈடுபடுவதனால் பொதுமக்களுக்கு நன்மை பயப்பதோடு உங்கள் திறமையும் வளரும் என்றுகூறி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் மாணவர்கள் கிராம மக்களிடையே சென்று அவர்களின் வாழ்வியல் முறைகள், கலாச்சாரம் அவர்களின் தற்போதைய நிலைகளை அறிந்து கொண்டு கிராம மக்களுடன் சேர்ந்து சமூக தொண்டாற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து காலை 11.30 மணிக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான கோ.கொளஞ்சியப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொண்டர்களிடையே அடிப்படை சட்டப்பிரிவுகள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணச் சட்டம், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் அதற்கான தண்டனைக்குறிய சட்டம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொள்வதற்கான சட்டப்பிரிவுகளை எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாலை 2.00 மணி முதல் கிராமத்திலுள்ள வீடுகளுக்குச் சென்று களப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஏழு நாட்கள் சிறப்பு முகாமில், சாலை பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, வாக்காளர் விழிப்புணர்வு, நுகர்வோர் விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம், மாணவர்களின் திறன்களை வளர்ப்பதற்கான கருத்தரங்குகள் மற்றும் தூய்மைப்பணிகள் ஆகியவை நடைபெறவுள்ளது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் நாட்டு நலப்பணி திட்ட தொண்டர்கள் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திட்ட அலுவலர் முனைவர் வெ.கருணாகரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் முடிவில் திட்ட அலுவலர் முனைவர் கோ.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் தொண்டர்களுடன் இணைந்து செய்திருந்தனர்.










