கோவை: மக்கள் குறை தீர்ப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் எடுத்து வந்த கத்தி, புகையிலை பொருட்கள், ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வாரம்தோறும் திங்கட்கிழமை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். இன்றைய தினம் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொள்வர்.

அதன்படி இன்றும் சோதனை செய்த பொழுது சில பொதுமக்கள் கத்தி, புகையிலை பொருட்கள், தீப்பெட்டி, பூச்சிக்கொல்லி, இருசக்கர வாகனங்களுக்கு பயன்படுத்தும் ரசாயன பொருட்கள், ஆகியவற்றை எடுத்து வந்துள்ளனர். பெண்கள் சிலர் அழகு சாதன பொருட்களை எடுத்து வந்த நிலையில் அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பொதுமக்கள் அவர்களது மனுக்களை கொடுத்து விட்டு வந்த பிறகு அவரவர் பொருட்களை மீண்டும் எடுத்துச் செல்லலாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு தினத்தில் சிலர் தீக்குளித்து தற்கொலை முயற்சிகள் மேற்கொள்வதாலும் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாலும் சோதனைகளானது தீவிர படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.










