விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தலைமையில் போலீசார் கள்ளத்தனமாக பட்டாசு திரி,பட்டாசுகள் தயாரிப்பதை தடுக்கும் நடவடிக்கையாக இறவார்பட்டி, சல்வார்பட்டி, அச்சங்குளம், உள்ளிட்ட கிராமங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சல்வார்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 50) இவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து சந்தேகத்தின் பேரில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அங்கு சோல்சா வெடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினார்கள். அவர்களை மடக்கி பிடித்ததில் கோழிப் பண்ணையின் உரிமையாளர் கருப்பசாமி ,கணஞ்சாம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரன் (வயது 25 ) இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தலை மறைவான மேட்டுப்பட்டியை சேர்ந்த சுப்புத்தாய் (40) ,கணஞ்சாம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (48) ,சிவகாமி புரத்தைச் சேர்ந்த பிச்சை (55) உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் தயார் செய்யப்பட்ட ஒரு லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் மூலப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.











