• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை..,

BySeenu

Dec 16, 2025

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து, ஆதியோகி ரத யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்த உள்ளன. இந்த ரத யாத்திரை, தேவாரம் பாடல் பெற்ற திருக்கோவில்கள் வழியாகச் செல்ல உள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (17/12/2025) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் அடியார் வள்ளுவன் அவர்கள் பங்கேற்று பேசினார்.

ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும், இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் தென் கைலாய பக்தி பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஆதியோகி ரத யாத்திரையை, தென் கைலாய பக்தி பேரவையுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆதீனங்கள் நடத்த உள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டின் நான்கு மண்டலங்களில் ஆதியோகி ரத யாத்திரை, அந்தந்த பகுதிகளில் உள்ள ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

அந்த வகையில், மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரை, கோவை ஆதியோகி முன்பு வரும் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைக்க உள்ளனர்.

ஆதியோகி ரதங்கள், பிரத்யேகமாக 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள்,தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொள்ள உள்ளன.