தாம்பரம் மாநகராட்சியில் உள்ள, 70 வார்டுகளில் சேகரமாகும் குப்பை அகற்றும் பணி, ‘அவர்லேண்ட்’ என்ற தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், 1,600ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இதில், 2வது மண்டலத்தில் குப்பை சேகரிக்கும் பணியில், ஆந்திராவை சேர்ந்த காசராஜ், 42, என்பவர் ஈடுபட்டு வருகிறார். அவர், பெருங்களத்துார் குண்டுமேடு பகுதியில் தங்கியுள்ளார். 2வது மண்டலத்தில் சேகரமாகும் குப்பை, பம்மல் விஸ்வேசபுரம் கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. எஞ்சிய 3,4,5 ஆகிய மூன்று மண்டலங்களில் சேகரமாகும் குப்பை, மேற்கு தாம்பரம் கன்னடப்பாளையம் கிடங்கில் கொட்டப்படுகிறது.
விஸ்வேசபுரம் கிடங்கிற்குள் செல்லும் இடத்தில் பள்ளம் ஏற்பட்டதால், அதை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக, 2வது மண்டல குப்பை, மேற்கு தாம்பரம் கன்னடப்பாளையம் கிடங்கில், இரண்டு நாட்களாக கொட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, காசராஜ், லோடு ஆட்டோவில் குப்பை ஏற்றிக்கொண்டு கன்னடப்பாளையம் கிடங்கிற்கு சென்றார். அங்கு குப்பை கொட்டிவிட்டு திரும்பி வந்த போது, தாம்பரம் மாநகராட்சி, 52 வது வட்ட தி.மு.க., செயலர் விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேர் என, ஐந்து பேர் சேர்ந்து, பல்லாவரம் குப்பை, எதற்காக எங்கள் பகுதிக்கு கொண்டு வந்து கொட்டுகிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, உருட்டு கட்டையால் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
தொடர்ந்து, காசராஜை, இரும்பு பைப் மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதற்கிடையில், இதேபோல் மூன்று வாகனங்களில் குப்பை கொட்ட வந்தவர்கள், காசராஜ் தாக்கப்படுவதை பார்த்து சத்தம் போட்டனர். இதையடுத்து, விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
காயமடைந்த காசராஜை, சக பணியாளர்கள் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, அவர்லேண்ட் நிறுவனத்தினர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து, விஜயன் மற்றும் அவரது கூட்டாளிகள் நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
தி.மு.க., வட்ட செயலரான விஜயன், கன்னடப்பாளையம் குப்பை கிடங்கில் குப்பை கொட்ட, இதேபோல் தொடர்ந்து இடையூறு செய்து வந்ததோடு, துாய்மை பணியாளர்களை தாக்குவது, மிட்டுவது போன்ற செயலிலும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. தி.மு.க., வட்ட செயலர் ஒருவர், துாய்மை பணியாளரை சரமாரியாக தாக்கிய சம்பவம், ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், மக்கள் மத்தியில் அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றமில்லை.