மகனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஆட்டோவில் ஏறி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர்,வஜ்ரவேல் தெரு பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர், பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.இவரது மனைவி டெய்சி ராணி(48) . இவருக்கு சாம்சன் மற்றும் சார்லஸ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி வீட்டில் இருந்த இளைய மகன் சார்லஸை தாய் டெய்சி ராணி படிக்கச் சொன்ன போது, தாய், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய டெய்சி ராணி தனது செல்போனையும் அனைத்து வைத்து விட்டு சென்றுள்ளார்.
அதன் பிறகு அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்த எந்த விபரமும் தெரியாமல் இருந்து வந்தது. இதனால், அவரது கணவர் ஜோசப் மற்றும் மகன்கள் தங்களது உறவினர் வீடுகள் உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் அப்பகுதி உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தபோது பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் ஏறி சென்றது தெரியவந்தது. அதன் பின்னர் போலீசார் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்து,டெய்சிராணியை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சென்னை பெசன்ட் நகர் கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதந்து கொண்டு இருப்பதாக அப்பகுதி பொது மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்,தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெசன்ட் நகர் போலீசார், இறந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பார்த்த போது தான்,அது காணாமல் போன பொழிச்சலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோசப்பின் மனைவி டெய்சிராணி என்பது தெரிய வந்தது.பின்னர் அவரது சடலத்தை மீட்டு அதனை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகனுடன் ஏற்பட்ட தகராறில் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் மனைவி கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.