




பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டு உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் மினி சுவிஸ்சர்லாந்து என்று அழைக்கப்படும், பஹால்காம் பைசார் பள்ளத்தாக்கு பகுதியில், நேற்று முன்தினம் பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய திடீர் தாக்குதலில் உயிரிழந்த, 27 பேரில் ஒருவரான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த, தகவல் தொழில்நுட்ப பொறியாளர் மதுசூதனன் ராவின் உடல், காஷ்மீரில் இருந்து ஹைதராபாத் வழியாக, இன்று அதிகாலை இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தது.

சென்னை வந்தடைந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு, உடலை அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டு, அவரின் சொந்த ஊரான நெல்லூருக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னை பழைய விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையால் அளிக்கப்பட்ட அஞ்சலி நிகழ்ச்சிக்கு வந்திருந்த, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, பாஜக மாநில தலைவர் நயினார் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஒரு கையில்,
பயங்கரவாதிகளின் இந்த செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசு பயங்கரவாதிகளை வன்மையாக கண்டிக்க வேண்டும். பயங்கரவாதிகளின், பொதுமக்கள் மீதான தாக்குதல் என்பது, மக்களிடத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட இயக்கம் தான் காங்கிரஸ் பேரியக்கம். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி போன்றோர் பயங்கரவாதிகளால் தான் கொல்லப்பட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பயங்கரவாதிகளின் தாக்குதலால் வீர மரணம் அடைந்த, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மதுசூதனன் ராவ் உடலுக்கு இறுதி மரியாதையும், அவரது குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்தோம்.
பயங்கரவாதிகளுக்கு, மதம் இனம் என்ற அடையாளமே கிடையாது. பயங்கரவாதி என்றால், அவன் பயங்கரவாதி தான. இவ்வாறு பிளவுபடுத்தும் நடவடிக்கையை, யாராக இருந்தாலும் நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில்,
சுற்றுலா சென்ற பயணிகளை இந்துவா? என கேட்டறிந்து, சுட்டுக் கொன்றுள்ளனர். குறிப்பாக நெல்லூரை சேர்ந்த மென்பொருள் மதுசூதனன் ராவ், தாக்குதலில் உயிரிழந்துள்ளார். பிரதமர் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாகவும், உள்துறை அமைச்சர் தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் இது போன்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த மதுசூதனன் குடும்பத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறினார்.

