மதுரையில் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரியை செல்போன் மூலம் விற்பனையில் சிறப்பு பட்டாலியன் காவலர் உட்பட 3 பேர் கைது செய்து, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட கார், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவமும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கேரள உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விற்பனையாகும் லாட்டரி டிக்கெட் வாங்கி வந்து துண்டுசீட்டு மூலமாக லாட்டரி நம்பரை எழுதி விற்பனை செய்தும், ஆன்லைன் மூலமாக நம்பரை அனுப்புவது என நுாதன முறையில் லாட்டரி விற்பனையும் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெறுகிறது.
இதுபோன்று சட்டவிரோத லாட்டரி விற்பனை ஈடுபடுபவர்கள் குறித்து புகாரின் அடிப்படையில் தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்தும்வருகின்றனர். அதனடிப்படையில் மதுரை மாநகர் பீபிகுளத்தைச் சேர்ந்த பாலாஜி (52) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் அவரிடம் தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது ஆன்லைன் மூலமாக கேரள மாநில லாட்டரிகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
பாலாஜிக்கு வாட்ஸ் ஆப் மூலமாக கேரளா லாட்டரி எண்களை மதுரையை சேர்ந்த ரஹ்மத்துல்லா, கனி ஆகிய இருவரும் அனுப்பிவைத்த நிலையில், அதை பாலாஜி தனது நண்பர்களான மதுரைவீரன், பிரகாஷ் ஆகியோருக்கும் வாட்ஸ்அப் மூலமாக அனுப்பிவைத்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோத லாட்டரி விற்பனை செய்ததாக பாலாஜி, கனி, மதுரைவீரன், ரஹ்மத்துல்லா, பிரகாஷ் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பாலாஜியையும், மதுரை புதுார் பகுதியை சேர்ந்த கனி(32) ஆகிய இருவரையும் கைது செய்யப்பட்ட நிலையில் இதில் தலைமறைவாக இருந்த பிரகாஷ் இன்று கைது செய்யப்பட்டார். இவர் மதுரை 6-ஆவது சிறப்பு பட்டாலியன் படையில் காவலராக உள்ளார்.
காவலர் பிரகாஷ் 3 ஆண்டுகளுக்கு முன் இதே பிரச்னைக்காகவும், கிளப் மற்றும் விடுதிகளில் நடந்த சூதாட்டங்களுக்காகவும், மாமூல் வசூலித்து வந்த புகாரிலும், சூதாட்டத்திலும் ஈடுபட்டதால் 3 ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
6 மாதங்களுக்கு முன்பு மீண்டும் பணியில் சேர்ந்த நிலையில் கிளப்புகளுக்கு சென்று காவல்துறை ரெய்டு வராமல் பார்த்துக்கொள்கிறேன் எனக்கூறி வசூலில் ஈடுபட்டார். இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த பிறகும் தொடர்ந்து வசூலில் ஈடுபட்டதாக புகார் வந்ததால் தற்போது ஒரு நம்பர் லாட்டரியை தனது நண்பர்கள் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார்.
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் காவலர் இருப்பதால் தங்களுக்கு எந்த பிரச்னையும் வராது என நினைத்து லாட்டரி வியாபாரிகள் தைரியமாக விற்று வந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.