வரி ஏய்ப்பு சம்பந்தமாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அடுத்தடுத்து கேள்விகளை திருச்சி சூர்யா எழுப்பியுள்ளார்.
திமுகவின் ஊழல்கள் குறித்து சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த நிலையில் பாஜகவினர் குறித்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று திருச்சி சூர்யா அறிவித்திருந்தார். இதனையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொடர்ந்து கேள்விகளை அவர் எழுப்பி வருகிறார்.
இந்த நிலையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் திருச்சி சூர்யா நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம் !!
இன்று உங்களுடைய பிரஸ்மீட் பார்த்தேன், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, விஜயபாஸ்கர் என பதட்டத்தில் உளறினீர்கள். பாவம், உங்களுடைய ரீல் அந்து போய் பல மாசமாச்சு, நாடகம் முடியும் நேரமிது.
அண்ணாமலை மூன்றே வருடத்தில் பத்து ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டார் என முதன்முதலாக நான் சொன்ன போது உங்களிடம் கூலிக்கு வேலை செய்யும் வார்ரூம் ஆட்களும், உங்களுடைய உண்மை முகத்தை உணராத பாஜக தொண்டர்களும் என்னை திட்டி தீர்த்தார்கள். இன்று நான் சொன்னது முற்றிலும் உண்மை என பாஜக ஆளும் ஒன்றிய அரசின் வருமான வரித்துறையே உறுதி செய்துள்ளது. நீங்கள் DMK Files வெளியிட்ட பொழுது பினாமி சொத்துகள் எல்லாம் திமுக அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்து என கணக்கு சொன்னீர்களே இப்போது அதே லாஜிக் உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?
உங்களின் ஒரு பினாமி சத்திரபட்டி செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் ₹10 கோடி ரொக்க பணம், ₹240 கோடி வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்துள்ளது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை. சரி, ஏழாவது கேள்விக்கு வருவோம். உங்க அக்கா புருஷன் சிவகுமாரும் செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா இல்லையா ? ஊழல் என்றாலே ஊளையிட்டுக் கொண்டு வருவீர்களே 240 கோடி வரியைப்பு என்றால் 800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரி ஏய்ப்பு நடந்துள்ளது கணக்கு சரியா மலை? என்று பதிவிட்டுள்ளார். பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர் திருச்சி சூர்யா. இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறினார் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.








