தீபாவளி விடுமுறை: கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் – அருவியில் குளித்து கொண்டாடி, மகிழ்ந்தனர் !!!
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்தில், பல்லாயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்று உள்ளனர்.
கோவை, போளுவாம்பட்டி வனச் சரகத்திற்கு உட்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலையில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்து உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாரத்தில், திங்கட்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களும், இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, நீர்வீழ்ச்சியில் குளித்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக, சுற்றுலா தலங்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர் விடுமுறையால், கோவை குற்றாலத்திலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையால், நேற்று முன்தினமும், நேற்றும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
வனப் பகுதிக்குள் நடந்து சென்று நீர்வீழ்ச்சியில், குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து கொண்டாடினர்.