கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியோரது தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இயக்கி விஜய் ஆண்டனி நடிப்பில் வெளி வந்த திரைப்படம் “ரத்தம்”.
இத்திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உட்பட மற்றும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். புகழ்பெற்ற புலனாய்வு பத்திரிகையாளரான ரஞ்சித் குமார் (விஜய் ஆண்டனி), தனது மனைவி மறைவுக்கு பின் தன் ஒரே மகளுடன் கொல்கத்தாவில் வசித்து வருகிறார்.
அவருடைய நெருங்கிய நண்பன் செழியன் சென்னையில் கொடூரமாகக் கொலை செய்ய படுகிறார். தனது வளர்ப்புத் தந்தையும் நண்பனின் தகப்பானுமான பத்திரிகை அதிபருமான ரத்ன பாண்டியன் (நிழல்கள் ரவி), அவரை மீண்டும் சென்னைக்கு வர அழைக்கிறார்.
இதை ஏற்று கொண்டு வரும் குமார், தனது நண்பனின் கொலைக்கானப் பின்னணியை ஆராயத் தொடங்க, அவருக்குப் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன. பெரும்புள்ளிகள் தொடர்பு கொண்ட ஒரு டீம், இதுபோன்ற கொலைகளைச் செய்வது தெரிகிறது. அந்த டீம் ஏன் இப்படிச் செய்கிறது என்பதை குமார் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை.
வழக்கமாக, க்ரைம் த்ரில்லர் படங்களில், கொலை, கொலையாளி யார்? அதற்குப் பின்னுள்ள ‘மோட்டிவ்’, கொலையாளியை விரட்டி பிடிக்கும் போலீஸ் என்றுதான் கதை நகரும். ஆனால், இதில் ‘ஹேட் கிரைம்’ என்ற புதிய விஷயத்தை வைத்து இன்வெஸ்டிகேஷன் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.
வெறுப்புக் குற்றங்களைப் பேசியதற்காகவும் அதற்காக உளவியல் ரீதியாக இளைஞர்களைத் தேர்வுசெய்து எப்படி அவர்களைத் தூண்டுகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்குறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன்.
சோகமான முகத்துடன் வரும் விஜய் ஆண்டனி, புலனாய்வு பத்திரிகையாளர் கதாபாத்திரத்கேற்றார் போல சிறப்பாக நடித்துள்ளார். எடிட்டராக வரும் நந்திதா ஸ்வேதா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார். மஹிமா நம்பியார் அதிர்ச்சி தரும் கதாபாத்திரத்தில் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்.
அவருக்கும் விஜய் ஆண்டனிக்கும் நடக்கும்உரையாடல் அருமை.
பாலியலுக்குள் உள்ளாக்கப்படும் ரம்யா நம்பீசன், மற்றும் நிழல்கள் ரவி, போலீஸ் அதிகாரிகளாக வரும் ஜான் மகேந்திரன், உதய் மகேஸ் உட்பட அனைவரும் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்துள்ளனர்
கண்ணன் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தோடு இணைந்து பயணிக்க வைக்கிறது. மொத்தத்தில் “ரத்தம்” திரைப்படம் திரையில் பார்க்க வேண்டிய படம்.
