• Mon. May 13th, 2024

இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழா..!

BySeenu

Jan 11, 2024

பி.ஐ.எஸ். (டீஐளு) எனும் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழாவை முன்னிட்டு பி.ஐ.எஸ். கோயம்புத்தூர் கிளை சார்பாக கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை சரிபார்த்து உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் பி.ஐ.எஸ். (டீஐளு) எனும் இந்தியத் தரநிலைகள் பணியகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இந்த பணியகத்தின் 77 ஆவது நிறுவன நாள் விழாவை கோவை கிளை தர நிலைகள் பணியகம் மற்றும் கொங்குநாடு கல்லூரி ஆகியோர் இணைந்து நடத்தினர். முன்னதாக கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவர் மா. ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்ற இதில், இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் கோயம்புத்தூர் கிளையின் தலைவர் கோபிநாத் துவக்க உரையாற்றினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக, கோயம்புத்தூர், அறிவியல் மற்றும் தொழில்துறை சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மோகன் செந்தில் குமார் கலந்து கொண்டு பேசியதாவது..,

“இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற பொருட்கள் அனைத்தும் தரமுடையவையாக இருக்க வேண்டும் என்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இந்தியப் பொருட்கள் நுகர்வோரால் விரும்பி வாங்கப்படும் நிலை உருவாக வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா உலகளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உருவாவதற்கு இந்தியப் பொருட்களின் தரம் இன்றியமையாதது என்றும் குறிப்பாக மாணவ, மாணவியர்களுக்குத் தரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தினார். முன்னதாக விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் சி.ஏ. வாசுகி இவ்விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றினார். அவர்தம் உரையில், “கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் பொன்விழா ஆண்டில் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் 77 ஆவது நிறுவனநாள் விழா கல்லூரியில் கொண்டாடப்படுவதற்கு நன்றி தெரிவித்தார்.
வருங்கால பாரதத்தை உருவாக்குவது இன்றைய இளைஞர்களின் கைகள் என்றும் அவை இளமையாகவும் தூய்மையாகவும் தரமாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. மேலும், தரப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு வினாடி -வினா, பேச்சுப் போட்டி, பதாகை தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் முனைவர் லட்சுமணசாமி கோவை கிளை டீ பிரிவு விஞ்ஞானி கவின் இந்தியத் தரநிலைகள் பணியகத்தின் பொறியாளர் திவ்யப்பிரபா உட்பட, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *