• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

பெண்ணின் வயிற்றில் இருந்த 6கிலோ கட்டியை அகற்றி..,
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

திருநெல்வேலி மாவட்டம், சம்பன்குளத்தில் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு சுமார் 6கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்க்குறிச்சி அருகே சம்பன்குளத்தில் வசித்து வருபவர் 39 வயதான பெண் சயீது மீராள். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஒரு மாதமாக கடும் வயிற்று வலியால் அவதிபட்டு வந்துள்ளார். பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடையத்தில் சார்ந்த சில சமூக ஆர்வலர்கள் அவரை தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வயிற்றில் கட்டி இருப்பதை கண்டுபிடித்தனர். ஸ்கேன் செய்ததில் கட்டி வயிறு முழுவதும் ஆக்ரமித்து இருப்பதை கண்டறிந்தனர். புற்றுநோய்க் கட்டிக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டது. மகப்பேறு மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டது. நோயாளியின் சர்க்கரை அளவு குறைக்கபட்டது.
பின்னர் அவருக்கு பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை 13.04.2022 அன்று மேற்கொள்ளப்பட்டது. மயக்க மருத்துவர் சுரேஷ் மில்லர், அறுவை சிகிச்சை மருத்துவர் சொர்ணலதா முன்னிலையில் மருத்துவர் கார்த்திக் மற்றும் மருத்துவர் ஜெரின் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் கர்ப்பப்பை அருகே இருந்த சுமார் 6கிலோ அளவிலான கட்டியை அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி வயிற்று வலி நீங்கி நலமுடன் உள்ளார்.
நோயாளி பயன்பெறும் வகையில் சிறப்பாக பணியாற்றிய நுண் கதிர் துறை சிறப்பு மருத்துவர்கள் மரு. ராமர், மரு. ஷமீமா, அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் குழு, மயக்க மருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு, அறுவை சிகிச்சை செவிலியர் செல்வி, அறுவை அரங்கு தொழில்நுட்பவியலாளர் சதீஷ், மற்றும் இதர மருத்துவமனை பணியாளர்கள் அனைவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. ஜெஸ்லின் மற்றும் உறைவிட மருத்துவர் மரு. ராஜேஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினர். தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உயர்தர அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது. இதன் மூலம் தென்காசி மாவட்ட மக்கள் இந்த வசதியை அதிக அளவில் பயன்படுத்தி, பயன்பெறுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அவர்கள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.