சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் முத்துசாமி(42). இவர் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வழயிாக கத்திப்பாரா மேம்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.

அதே வழியாக பின்னால் வேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று முத்துசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பின்னர் இரண்டு பைக், ஆட்டோ, கார் அடுத்ததாக ஐந்து வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் நூக்கம்பாளையத்தை சேர்ந்த சரவணன்(32), மேற்கு கே.கே.நகரை சேர்ந்த சுந்தர்ராஜ்(59), குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரை சேர்ந்த ஆராதனா(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், விபத்தை ஏற்படுத்திய கார் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் கார் என்றும்.அதை ஒட்டி வந்த டிரைவர் பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தாலுக்கா, லப்பைக்குடிகாடு, கழனிவாசலை சேர்ந்த புஷ்பராஜ்(39) என்பது தெரிவந்தது.
மேலும் புஷ்பராஜ் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, ரத்தப் பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் குடிபோதையில் இருப்பது உறுதியானது. இதையடுத்து, புஷ்பராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.