ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801ஆம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் மூன்று தினங்களுக்கு பின் மருது சகோதரர்களின் உடல் இவர்கள் கட்டிய காளையார் கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வீரமரணமடைந்த மருது சகோதரர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கடைபிடித்து வருகிறது.
மாமன்னர் மருது சகோதரர்களின் 220வது குருபூஜை விழாவை முன்னிட்டு தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுசகோதரர்கள் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.