நியாயமற்ற முறையில் வணிக ஆதாயம் சார்ந்த முயற்சியை மேற்கொண்டதற்காக மெட்டா நிறுவனத்துக்கு இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது.
வாட்ஸ்அப் தளத்தில் சேகரிக்கப்படும் பயனர்களின் தரவுகளை மெட்டாவின் மற்ற தளங்களுடன் விளம்பர காரணங்களுக்காக பகிர்வதை தடுப்பதும் இதில் அடங்கும். வாட்ஸ்அப் சேவையை பயனர்களுக்காக நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்றும் சிசிஐ தெரிவித்துள்ளது. மெட்டா அதன் மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்திய காரணத்துக்காக மெட்டாவுக்கு ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது சிசிஐ. மேலும், இந்த போட்டி நடைமுறையை நிறுத்தவும் சிசிஐ அறிவுறுத்தியுள்ளது. அதற்கான தீர்வை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மெட்டா மற்றும் வாட்ஸ்அப் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஜனவரியில் வாட்ஸ்அப் தளத்தில் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை புதுப்பிப்பு குறித்து பயனர்களுக்கு தெரிவித்தது. அந்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வந்த இந்த அறிவிப்பில் வாட்ஸ்அப்பை சேவையை தொடர்ந்து பயன்படுத்த, தரவு சேகரிப்பின் விரிவாக்கம் மற்றும் மெட்டா நிறுவனங்களுடன் கட்டாய தரவு பகிர்வு விதிமுறைகளை பயனர்கள் ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களையும் மெட்டா நிர்வகித்து வருகிறது.
மெட்டா நிறுவனத்துக்கு ரூ.213 கோடி அபராதம் விதிப்பு
