பாரதிய ஜனதா கட்சியில் இணைய போவதாக வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னையில் தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்தித்து பேசினார்.
தமிழக முன்னாள் அமைச்சர், விருதுநகர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தனது சொந்த பணி நிமித்தமாக கடந்த 5 தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றார். இதனை அறிந்த மீடியாக்கள், டெல்லியில் முக்கிய தலைவர்களை கே.டி.ராஜேந்திரபாலாஜி சந்திக்க போவதாகவும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய போவதாகவும் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட்டிருந்தன.
இதுகுறித்து சமூக வலைதளங்களிலும் பொய்யான செய்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சேலத்தில் பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ராஜேந்திரபாலாஜி சொந்த வேலைக்காக டெல்லி சென்றுள்ளார். அவர் குறித்து திட்டமிட்டு அவதூறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவர் “எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில்தான் உள்ளார். பாஜகவில் இணைய மாட்டார்” என்று உறுதிபட தெரிவித்தார். இந்நிலையில் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சென்னையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து தனது டெல்லி பணிகள் குறித்து விவரித்தார். அப்போது சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சீனிவாசபெருமாள், நரிக்குடி ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை சேதுபதி அருகில் இருந்தனர்.